

சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், டி.டி.வி தினகரன் முன்னிலை வகித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்ளனர்.
தினகரன் முன்னிலை பெற்றதும் அவரது தரப்பு முகவர்களுக்கும், அதிமுக முகவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் கைக்கலப்பாக முற்றிய நிலையில், சேர்களை தூக்கி இரு தரப்பினரும் வீசினர். இதில், தேர்தல் அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, உள்ளே புகுந்த போலீசார் பிரச்சனையில் ஈடுபட்ட முகவர்களை வெளியேற்றினர். துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக அரை மணிநேரத்திற்கும் மேலாக வாக்கு எண்னிக்கையை நிறுத்தி வைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உத்தரவிட்டார். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.