ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்- விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஊரடங்கு நீட்டிப்பால் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
விஜயதரணி எம்.எல்.ஏ.
விஜயதரணி எம்.எல்.ஏ.
Published on

நாகர்கோவில்:

விஜயதரணி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது கொரோனா நோயை மேலும் பரவ விடாமல் தடுக்கும். தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டுகளுக்கு இலவச குடிமை பொருள் வழங்குவதுபோன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ 2 ஆயிரம் வழங்க வேண்டும்.

தொடர்ந்து 45 நாட்கள் ஊரடங்கு கடை பிடிக்கும் வேளையில் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் வேலை, கல்வி, வியாபாரம் என சென்றும், வாகனம் ஓட்டி சென்றும் சிக்கி இருப்பவர்களை மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்க மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழுகும் வேளாண் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தி நுகர்வோரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களுடன் வரும் சரக்கு வாகனங்களையும், பொருட்களை இறக்கியபின் காலியாக செல்லும் சரக்கு வாகனங்களையும் தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com