

திருச்சி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, காய்கறிகளின் விலை பரவலாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயம் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். ஓட்டல்களும் வெங்காயம் அதிக அளவில் தேவைப்படுவதால் பலரும் விலையேற்றத்தால் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் வெங்காயத்தை தொடர்ந்து, மற்ற அனைத்து காய்கறிகள் விலைகளும் உயர்ந்து வருகிறது. உருளைக்கிழங்கு கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. தற்போது ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும் முட்டைகோஸ் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. ரூ.15-க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “திருச்சி மார்க்கெட்டில் அனைத்து வகையான காய்கறிகளுமே விலை ஏற்றம் கண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படவில்லை. இதனால் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. உருளைக்கிழங்கு ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சி மார்க்கெட்டுக்கு வருகிறது. ஆனால் உருளைக்கிழங்கும் தற்போது விலை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் பண்டிகை காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது“ என்று கூறினார்.