

சென்னை:
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வீடு வீடாக பகலில் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் தினமும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்கள்.
பிற்பகலில் நடக்கும் இந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வினரும் திரளாக கலந்து கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் கொடிகளுடன் திரளாக தொண்டர்கள் செல்வதால் ஆர்.கே.நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வைகோ, திருமாவளவன் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிர்வாகிகள் மகேந்திரன், கே.சுப்பராயன் ஆகியோர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
16 மற்றும் 19-ந்தேதிகளில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பிரசாரம் செய்கிறார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும் தி.மு.க. வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.