பெரியார் சிலை சேதம்- வைகோ, ராமதாஸ், அழகிரி கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
பெரியார் சிலை சேதம்- வைகோ, ராமதாஸ், அழகிரி கண்டனம்
Published on

சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் சமூகத்திற்கு எவருமே ஆற்ற முடியாத அரும்பெரும் பணிகளை செய்த பெரியாரின் சிலையை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் இத்தகைய வன்முறைச் செயலின் மூலம் சிலைக்கு சேதாரம் ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் பெரியார் மீது பற்று கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அணி திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.

பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko

X

Maalai Malar
www.maalaimalar.com