கட்சியின் கொடியை மாற்ற வேண்டிய அவசியம் சிவசேனாவுக்கு இல்லை: உத்தவ் தாக்கரே

இந்துத்வாவை நிரூபிப்பதற்கு கட்சியின் கொடியை மாற்ற வேண்டிய அவசியம் சிவசேனாவுக்கு இல்லை என நவநிர்மாண் சேனாவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சாடி உள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Published on

மும்பை :

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சி தீவிர இந்துத்வா கொள்கைக்கு மாறி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சத்ரபதி சிவாஜி காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜமுத்திரையுடன் கூடிய காவி கொடியை ராஜ்தாக்கரே கடந்த மாதம் அறிமுகம் செய்தார். மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்ததன் மூலம் அந்த கட்சி இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி விட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் இந்துத்வா கொள்கையில் இருந்து சிவசேனாவை பிரித்து அந்த வெற்றிடத்தை நவநிர்மாண் சேனாவை கொண்டு நிரப்பவும் காங்கிரஸ் சதி செய்வதாகவும் அந்த கட்சி குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தான், வங்கசேத்தை சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்ற கோரி நேற்றுமுன்தினம் ராஜ்தாக்கரே தலைமையில் நடந்த பிரமாண்ட பேரணியில் நவநிர்மாண் சேனாவினர் தங்களது காவி நிற புதிய கொடியுடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நவநிர்மாண் சேனா தனது கொடியை மாற்றியது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் மும்பையில் நடந்த தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-

நான் எனது இந்துத்வத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது மறைந்த பாலாசாகேப்பின் (பால் தாக்கரே) இந்துத்வா. இது தூய்மையானது. நான் எனது கட்சியின் கொடியை மாற்றவில்லை. அதற்கு அவசியம் இல்லை. நமது இந்துத்துவா என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com