திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி நிதின்கட்காரி சாமி தரிசனம்
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி நிதின்கட்காரி தனது குடும்பத்தினருடன் நேற்று திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதி ஒன்றில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் வழங்கினார். பின்னர் நிதின்கட்காரி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.
அப்போது கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ், தேவஸ்தான வரவேற்பு அதிகாரிகள் ஹரேந்திரநாத், லட்சுமி நாராயணயாதவ், அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக, திருமலைக்கு வந்த மத்திய மந்திரி நிதின்கட்காரியை, தேவஸ்தான அதிகாரிகளும், பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் விடுதிக்கு சென்று வரவேற்றனர். தேவஸ்தானம் சார்பில் கோவிலின் பிரதான வாயிலில் அர்ச்சகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

