10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா

வங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகள்
ரோஹிங்யா அகதிகள்
Published on

டாக்கா:

மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர்.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹேக்ஸ் பசார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் ஆயிரத்து 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு முகாம் பகுதியின் 5 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட குடியுருப்பு பகுதி முழுமையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 லட்சம் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள  உலகின் மிகப்பெரிய முகாமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் வங்காளதேச அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com