

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைதரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதில் தினகரன் பெயர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது டிசம்பர் 5-ந்தேதிக்குள் துணை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.