

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் இன்று தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா பாசிச ஆட்சி என்று கோஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை போலீசார் உடனே கைது செய்தனர். ஆனால் போலீசாரையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
அவர் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அவர் சொன்னது போல போலீஸ் துறைக்கு கல்லீரல் கெட்டுப் போய் உள்ளது என்பதுபோல் இருக்கிறது.
வடமாநிலத்தில் இருப்பது போல் இங்கு இந்து-முஸ்லீம் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனக்கு ஓட்டு போட்டதால் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ஜிவரத்தினம் தெருவில் ஆட்டோ கேஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு இன்று தொடர உள்ளேன். ஆர்.கே. நகர் தொகுதி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #RKNagar #TTVDhinakaran