

சென்னை:
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, 1,324 பஞ்சாயத்து தலைவர் பதவி, 10,329 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 12,341 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 85.31 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக காஞ்சிபுரத்தில் 72.33 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
2 கட்ட தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்றவர்கள் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.