

தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி கமிஷன் மூலமாக மத்திய அரசு, ஆண்டு தோறும் தேசிய பேரிடர் பணிக்காக 2 கட்டமாக நிதி வழங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும், ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான நிதியை வழங்கிவிட்டது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கான 2-வது கட்ட நிதியை தான் முன்கூட்டி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு மத்திய அரசு வழங்கிய 354 கோடி ரூபாய் கஜா புயல் நிவாரணத்துக்கு போதாது என்று கூறுகின்றனர். கஜா புயல் நிவாரணத்துக்கு இன்னும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
மத்தியக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளது. ஆகையால் நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம். கேரளாவிற்கு 3458 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அதே போன்று 12 மாவட்டங்கள் தமிழகத்தில் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வர், பிரதமரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளார்.
மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கையுள்ளது. முதல்வர் ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உதவுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. மக்களின் உணர்வுகளை மதித்து 22 ஆண்டுகள் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணையலாம் என்று ஏற்கனவே முதல்வர், துணை-முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களும் இணைவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது, இணைந்தால் வரவேற்போம், யார் வேண்டுமானாலும் வரலாம்.