இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்திற்கு உதவாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கட்டுமானத்திற்கு பயன்படுத்த முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. #TNGovt #importedsand #SC
இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்திற்கு உதவாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Published on

புதுடெல்லி:

மலேசியாவில் இருந்து தனியார் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 55 டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாணையை காட்டி, மணலை விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் தடை விதித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த தனியார் நிறுவனம் முறையீடு செய்தது. இறக்குமதி செய்த மணலை வாங்கிக்கொள்ளவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசே வாங்கி கொள்ளுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக  தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இன்று மதியம் 12.45-க்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தது. கட்டுமானத்திற்கு உதவாத இறக்குமதி மணலை வாங்கி நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதையடுத்து மணல் கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. #TNGovt #importedsand #SC

X

Maalai Malar
www.maalaimalar.com