மெஜாரிட்டியை இழந்தது தமிழக அரசு: ஜனாதிபதியிடம் தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

தமிழக முதலமைச்சருக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து, சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.
மெஜாரிட்டியை இழந்தது தமிழக அரசு: ஜனாதிபதியிடம் தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு
Published on

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். எனவே, அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்திய தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், இது தொடர்பாக ஆளுநருக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தனர்.

தி.மு.க. சார்பில் எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, காங்கிரசைச் சேர்ந்த ஆனந்த்சர்மா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையை உடனே கூட்ட கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளையும் அவர்கள் தங்கள் மனுவில் மேற்கோள் காட்டி இருந்தனர். கவர்னர் வித்யாசாகர் ராவ் மீது சரமாரியாக புகாரும் தெரிவித்தனர்.

ஜனாதிபதியை சந்தித்த பிறகு இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண நிலை பற்றி எடுத்து கூறி மனு கொடுத்தோம்.

தமிழகம் இன்று ஆழமான அரசியல் நெருக்கடியில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாக உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்ததால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதை கண்கூடாக காண முடிகிறது.

ஆனால் கவர்னர் முதல்-அமைச்சரை அழைத்து சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி கேட்காமல் உள்ளார்.

அவரை சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் இது அ.தி.மு.க.வின் உட்கட்சி சண்டை. இதில் தலையிட முடியாது என்றும் கூறி இருக்கிறார். இது ஒருதலைபட்சமாக உள்ளது. கவர்னரின் கூற்றை ஏற்க முடியாது.

அரசியல் சட்டத்தின் காவலர் என்ற முறையில் ஜனாதிபதி இதில் தலையிட வேண்டும் என்றும் தமிழக மக்களுக்காக உதவ சட்டசபையை கூட்ட கவர்னர் முன்வர வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, “இதில் முடிவெடுக்க தனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

ஜனாதிபதி மக்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற, இன்றைய அரசியல் நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒருமித்த குரலில் நாங்கள் எங்கள் கருத்துக்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி உள்ளோம். தமிழக கவர்னரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளதால் கவர்னர் உடனே முதல்-அமைச்சரை கூப்பிட்டு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும், ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளோம்.

நாங்கள் சொன்ன கருத்தை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கவர்னருக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்து அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதை தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் கவர்னர் இதை உட்கட்சி பிரச்சினை. அதில் நான் தலையிட முடியாது என்று கூறி இருக்கிறார்.

எனவே ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். நாங்கள் சொன்ன கருத்துக்களையும், நியாயங்களையும், ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம், என்றார்.

பின்னர் அவரிடம், சட்ட ரீதியாக ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வீர்களா? என்று கேட்டபோது அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.

தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கும், மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com