மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதினால் தான், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami
மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
Published on

சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதினால் தான், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

சீரான சுகாதார பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில் முன்னோடி செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைக்குழு ஆகியவை சிறந்த மருத்துவ சேவையை அளித்து வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா மருந்தகம் போன்ற பல முன்னோடி திட்டங்களையும் முதன் முதலாக செயல்படுத்திய பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளது.

இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்காக மத்திய அரசின் விருதை தமிழ்நாடு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வெகு சிறப்பான செயல்பாட்டின் மூலம் குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவள விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு சிறந்த சாதனையை படைத்துள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகளின் கீழ், தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்கினை 2016-ம் ஆண்டுக்குள் அடைந்த இந்தியாவின் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

கடந்த 7 ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 221 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 190 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

அரசால் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத முயற்சியின் காரணமாக மதுரை மாவட்டம் தோப்பூரில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், விருதுநகரில் ஒரு புதிய பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளது.

தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிற காரணத்தால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com