உள்ளாட்சி மறைமுக தேர்தல்- திருவண்ணாமலையில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக
திமுக
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் 18, ஒன்றிய குழு தலைவர் உட்பட 898 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட கவுன்சிலர், 341 ஒன்றிய கவுன்சிலர், 860 ஊராட்சி மன்ற தலைவர், 6199 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவி என மொத்தம் 7 ஆயிரத்து 434 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் 18 ஒன்றியக்குழு தலைவர் மற்றும் 18 துணைத்தலைவர் 860 ஊராட்சி மன்ற உதவி தலைவர் என 898 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்தது.

மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

மறைமுகத் தேர்தல் நடைபெறும் இடங்களில் டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழுவில் தனி பெரும்பான்மை பெற்று உள்ளதால் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பார்வதி, துணைத் தலைவராக பாரதி ராமஜெயம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு ஒன்றிய தேர்தலில் மோதல் ஏற்பட்டதால் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை, புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், போளூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, பெரணமல்லூர், செய்யாறு, தெள்ளார் ஆகிய 10 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

புதுப்பாளையம் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தரபாண்டியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜமுனாமரத்தூர், மேற்கு ஆரணி, வந்தவாசி, ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அனக்காவூர் ஒன்றியத்தில் பா.ம.க. வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com