திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,000 ஊசிகள் தயார்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,000 ஊசிகள் தயாராக உள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த ஊசி மூலம் 10 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பத்தூர்:

கொரோனா தொற்று சிகிச்சைக்கு சில தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக சிகிச்சையளித்து கொரோனா நோயை குணப்படுத்தி வருகிறார்கள்.

இது குறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன் கூறியதாவது:-

கொரோனா வராமல் தடுக்கவேண்டுமானால் முககவசம் அணிய வேண்டும். வந்துவிட்டால் தாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும். கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவமனைக்கு செல்லாமல் தாமதிக்கும் பட்சத்தில் நுரையீரல் முற்றிலும் கெட்டுப்போகும். அதன்பிறகு உயிரைக் காப்பாற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்படும்.

அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளது. கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க 33 ஆக்சிஜன் கருவி, எந்த மருத்துவமனையிலும் இல்லாத தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் ஊசிகள் அரசு மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இதுவரை 10 பேருக்கு ஊசி செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,000 ஊசிகளை தயாராக வைத்துள்ளோம். எனவே நோய் அறிகுறி தென்பட்டதும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com