

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குரங்கணி மலைப் பகுதிகளில் நடந்த கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. சென்னையில் இருந்தும், வேறு சில பகுதிகளில் இருந்தும் மலையேற்றத்திற்காக சென்றவர்களில் 10 பேர் அங்கே சுற்றிச் சுழன்ற காட்டுத்தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாகவே குரங்கணி பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது என்பதை அரசு அதிகாரிகள் அறியாமலா இருந்திருப்பார்கள்?. இந்த நிலையில், கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். மேலும், இதுகுறித்து நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.