7 பேர் விடுதலை - மத்திய மந்திரி அமித்ஷாவிடம் திருமாவளவன், அற்புதம்மாள் வலியுறுத்தல்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவிடம் திருமாவளவன், அற்புதம்மாள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை திருமாவளவன் சந்தித்த காட்சி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை திருமாவளவன் சந்தித்த காட்சி
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

எனவே 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரத்தில் கவர்னர் தாமதிக்காமல் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று பிற்பகல் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அவருடன் ரவிக்குமார் எம்.பி., பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com