கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை- புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை- புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.

அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் .

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவரமுடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அவைகளை எழுதிக் கொடுக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com