அரசு நிகழ்ச்சிகளில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.
Madras high court
Published on

சென்னை ஐகோர்ட்டில், அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி மே 10-ந்தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ந்தேதி பிறப்பித்த சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை தொடங்க எந்த தடையையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com