அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யப்படலாம்- ராஜன் செல்லப்பா

அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யப்படலாம்- ராஜன் செல்லப்பா
Published on

மதுரை:

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் ராஜன் சொல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் என்று தி.மு.க.வி.னர் கூறுவதில் உண்மையில்லை.

எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க.வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.

மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல, அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை காக்க பணியாற்றி வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. ஆகியவைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.

அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. பாராளுமன்ற தேர்தலுக்காக அல்ல, அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மழைக்காலங்களில் பேரிடர் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் தி.மு.க. அரசு கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com