ஒருவர் செய்த தவறால் அமலாக்கத்துறையே தவறாகி விடாது: அண்ணாமலை

தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
ஒருவர் செய்த தவறால் அமலாக்கத்துறையே தவறாகி விடாது: அண்ணாமலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மழை, வெள்ளம் வருவதும் அதனை பார்வையிட வேட்டியை மடித்துக்கொண்டு முன்பு கலைஞர், பின்பு ஸ்டாலின், அதன் பின்பு தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், இனி அவரது மகன் இதே போல பார்வையிட செல்வார். இதற்கு நிரந்தர தீர்வு காண அவர்களிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது.

சென்னையில் மழை வெள்ளத்தோடு வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்கிறது. மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அந்தத் துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல.

இதுபோல காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் காவல்துறை முழுமையாக தவறு என்று கூற முடியுமா? காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது. தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது. மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கு துடைத்து எறியப்படும் நிலையில் உள்ளது.

சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும்.

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார்கள். அரசியலுக்கு வரவழைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகமாட்டார் என்றார்கள். எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டார், அமைச்சராக மாட்டார் என்றார்கள். அமைச்சராக்கப்பட்டார். அதுபோல துணை முதல்வர் ஆக மாட்டார் என்று கூறினால் ஆவார் என்று அர்த்தம். அது அவர்கள் விருப்பம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி, நெல்லையில் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.

மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com