

திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் மேகமலை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2009-ல் தி.மு.க. ஆட்சியில் தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது. 2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.
* 15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர், கடந்த காலங்களில் வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.
* மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை த.வெ.க. அரசு செய்யாது.
* மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் த.வெ.க. அரசு மேற்கொள்கிறது.
* 2021-ல் புலிகள் காப்பகமாக அறிவித்த போது திமுக முறையாக கையாளவில்லை.
* 2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்த போது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.
மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க. எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தி.மு.க. அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது. மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார்.