எழும்பூரில் நாளை மறுநாள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு- ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை

ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழும்பூரில் நாளை மறுநாள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு- ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com