புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12 மீனவ கிராம மக்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டம்..

பட்டினப்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய தலைமைச்செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி மக்கள் சார்பாக வரும் 15 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Secretariat
Published on

எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆலோசனை

பட்டினப்பாக்கம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் , புதிதாக அமையவிருக்கும் தலைமைசெயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு

குறிப்பாக இந்த திட்டத்தால் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பல ஆண்டுகளாக பூர்வ குடிகளாக உள்ள எங்களை இவ்விடத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தினால் முள்ளிகுப்பம், முள்ளிமாநகர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்ன அவர்கள் பயன்படுத்தி வரும் நிலங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும்.

போராட்டம்

ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அப்பகுதியில் அமையவிருக்கும் இந்த திட்டம் கூடுதல் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்று கூறும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு வசித்து வரும் மக்களிடம் ஆலோசனை கேட்காமலேயே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பட்டா வைத்திருக்கும் நிலத்தை கையகப்படுத்துவதா என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கின்றனர். இதனிடையே சிபிஎம் தலைவர் சண்முகம் , அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரு திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com