தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன! பயணிகள் அதிர்ச்சி

நவம்பர் 7 பயணம்: இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
 train tickets sold out
Published on
Summary

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகைக்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், வார இறுதி மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாட்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்திய ரெயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதியின்படி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் ரெயில் நிலைய கவுண்டர்களில் தொடங்கியது.

நிமிடங்களில் தீர்ந்த டிக்கெட்டுகள்

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னை மத்திய ரெயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மற்றும் தூத்துக்குடி நோக்கிச் செல்லும் முக்கிய விரைவு ரெயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் காலி ஆகின.

இதனால் இணையவழியிலும் ரெயில் நிலையங்களிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். IRCTC இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால், இணையதள சேவை மந்தமடைந்ததுடன், சில நிமிடங்களிலேயே 'காத்திருப்போர் பட்டியல்' நிலைக்கு ரெயில்கள் சென்றன.

அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவு அட்டவண

நவம்பர் 7 பயணம்: இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

நவம்பர் 8 பயணம்: நாளை மறுநாள் (செப்டம்பர் 9) முன்பதிவு செய்யலாம்.

திரும்பி வருவதற்கான முன்பதிவு: தீபாவளி முடிந்து மீண்டும் பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

சிறப்பு ரெயில்கள் இயக்கக் கோரிக்கை

வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டதால், தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலான சிறப்பு ரெயில்களைத் தெற்கு ரெயில்வே உடனே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com