

சென்னை வண்டலூர் அருகே விடுமுறை நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியைத் தாக்கி, அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (49). இவர் ஊனமாஞ்சேரியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாளான நேற்று, ஊனமாஞ்சேரி பகுதியில் அரசு உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காகச் சென்றுள்ளார். மாலை வேளையில் பணி அனைத்தையும் முடித்துக் கொண்டு, மீண்டும் தன் வீட்டிற்குச் செல்வதற்காக வண்டலூர் ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தில் ஏறி, படிக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென ஆசிரியை செல்வியைக் கீழே தள்ளித் தாக்கியுள்ளான். தாக்குதலால் நிலைதடுமாறிய ஆசிரியையின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை செல்வி, சங்கிலியைக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறே கொள்ளையனுடன் கடுமையாகப் போராடினார். இருப்பினும், அந்த மர்ம நபர் பலவந்தமாகச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தண்டவாளம் வழியாக ஓடித் தப்பித்துவிட்டான். கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஒட்டேரி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கீழே கிடந்த 2 பவுன் மாங்கல்யம் மீட்கப்பட்டு ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டப்பகலில் அரசுப் பணிக்கு வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி ஆசிரியை செல்வி காவல்துறையினரிடம் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒட்டேரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி அணிந்து தப்பிய அந்த வாலிபரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.