‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கவேண்டும்.
‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!
Published on

லாக்கப் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது.

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கவேண்டும்.

அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, “வேலியே பயிரை மேய்ந்தது போல" பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்ககூடியது.

தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com