

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டையில் அமைந்துள்ளது மாவீரன் தேசிங்கு நினைவு தூண். இந்த நினைவிடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரச மரம் ஒன்றை நடப்பட்டது.
இந்த மரம் வளர்ந்து தற்போது அந்த பகுதியில் நிழல் தந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அந்த அரச மரத்தை வெட்டி எடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சித்தனர். இதை அறிந்த பா.ம.க நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
அப்போது அவர்கள், மரத்தை வெட்ட வேண்டாம். நாங்கள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வைத்து நாங்களே பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பா.ம.க நிர்வாகிகள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி காப்பாற்றி அருகிலேயே வேறு இடத்தில் மீண்டும் நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 39-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாவீரன் தேசிங்கு நினைவு தூணில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தாங்கள் நட்டு, காப்பாற்றப்பட்ட அரச மரம் மீண்டும் துளிர்விட்டிருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
மரத்தை காப்பாற்றிய கட்சி நிர்வாகிகளை அவர் நேரில் பாராட்டினர். தொடர்ந்து அவர் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரம் நடப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்காக இந்த மரம் வெட்ட வந்த போது, பா.ம.க நிர்வாகிகள் அதனை வெட்ட வேண்டாம். நாங்கள் மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்து தற்போது இந்த மரத்தை பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இதை தான் அரசு செய்ய வேண்டும். நாங்கள் செய்துள்ளோம். சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.