

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டு காலகட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை செல்போன் செயலி மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. இது தரவுகளை விரைவாக சேகரிக் கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்யவும் உதவும்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி. மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள். ஆஸ்பத்திரிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.
பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது. தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக, வசிக்கும் கட்டிடம் எண், வீட்டு எண், வீட்டு தரை, சுவர், கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலை, குடும்ப எண், வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, குடும்ப தலைவர் பெயர், தலைவரின் பாலினம், குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள், வானொலி, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி, கணினி, தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட்போன், சைக்கிள், ஸ்கூட்டர், மேட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன், பிரதான உணவு தானியங்கள், செல்போன் எண் ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.