நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!

மீட்கப்பட்ட 21 பேர் இன்றிரவு சென்னை திரும்புகின்றனர்.
நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!
Published on

நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லியும் விரைந்தனர்.

சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், கும்பகோணத்தை தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம்,

நேபாளத்தை தளமாகக் கொண்ட சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்குச் சென்றிருந்ததில், அக்குழுவில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து ஐந்து பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தர்மபுரியிலிருந்து ஒருவர், திருச்சியிலிருந்து நான்கு பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து இரண்டு பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர், சென்னையிலிருந்து ஆறு பேர் மற்றும் புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர்.

இந்நிலையில் மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

நேபாள பெருவெள்ளம்

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக திரிசூலி மற்றும் போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை 480-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com