

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது:-
விவசாயத்திற்காக மோடி அரசு 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மோடி பதவி ஏற்ற உடன் விவசாயமும், ராணுவமும் தனது உயிர் மூச்சு என்று கூறினார். நதிநீர் இணைப்பிற்கு எதிரானவர் ராகுல் காந்தி. அமித்ஷாவையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு பார்த்தால் அமித்ஷா சென்ற மாநிலத்தில் பா.ஜ.க சிறப்பான வெற்றியையும், ராகுல் காந்தி சென்ற மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியும் அடையும்.
காங்கிரஸ் அரசின் அவல நிலையை ஒரு கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள், மருத்துவர் ஒருவரிடம் ஒரு அதிகாரி வைத்தியம் பார்க்க சென்றார். அந்த மருத்துவர் அவரிடம் இந்த நோய்க்கு பச்சை கேரட் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.
மறுநாள் மார்க்கெட் சென்ற அதிகாரி அங்கு இருந்த கேரட் அனைத்தும் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதை கண்டு கேரட் வாங்காமல் வந்துவிட்டார். இவ்வாறு விவசாயம் பற்றிய அடிப்படை தெரியாத அதிகாரிகளைதான் காங்கிரஸ் அரசு விவசாயத்துறையில் நியமனம் செய்து இருந்தது. எனவே தான் அவர்கள் ஆட்சி காலத்தில் விவசாயிகளை முன்னேற்ற முடியவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும் பட்சத்தில் உத்தரபிரதேசத்தில் யோகி அரசு தள்ளுபடி செய்ததுபோல் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.