தமிழகத்துக்கு மந்திரி பதவி கிடைக்குமா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்துக்கு மந்திரி பதவி கிடைக்குமா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்
Published on

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு டெல்லி செல்கிறேன். பா.ஜனதா சார்பாக 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்ளகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொள்கிறார்கள். அதையும் தாண்டி பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய பட்டியல் அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியாது.

பா.ஜனதா ஆட்சியில் தமிழ்நாடு என்றுமே புறக்கணிக்கப்படாது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை எடுத்து வர இருக்கிறோம். இனிமேலாவது பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச்சை திரித்து பேசி எதிர்க்கட்சிகள் லாபம் அடைய வேண்டாம். தமிழகத்திற்கு அதிகமான இடம் கிடைத்து இருந்தால் அதிக பலன் பெற்று இருப்போம் என்று சொன்னால், அதற்கு தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று தவறாக முகநூல்களில் பரப்பி வருகிறார்கள். கண்டிப்பாக பா.ஜனதாவினருக்கு தமிழகத்தின்மேல் அக்கறை உண்டு. திமுக-காங்கிரஸ் அல்லாத ஆட்சி காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக மக்களின் நீர் தேவையை போக்க இருக்கிறது.

காங்கிரஸ் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுமை செய்தது என்றும், இலங்கை தமிழர்களை இந்திய தமிழர்களை பாதுகாக்கவில்லை என்பதை இன்னும் மக்களிடம் வலிமையாக எடுத்துச் சொல்வோம்.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பதை என்னால் சொல்ல முடியாது. அது பிரதமர் மோடியின் முடிவு. இந்தக் கூட்டணியில் பல பேர் வெற்றி பெற்றிருந்தால் அதை என்னால் சொல்ல முடியும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரிவினை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது என்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் பா.ஜனதாவினர்.

தூத்துக்குடி தவிர வேறு எங்கு சென்றாலும் ஜெயித்து இருப்பேன் என்ற மனநிலை எனக்கு கிடையாது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் என்றுமே நன்றியுள்ளவளாய் இருப்பேன். அடுத்த வாரம் அங்கு ஒரு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com