என்னை கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினராக சேர்த்து இ-மெயில்: தமிழிசை குற்றச்சாட்டு

கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்று திருப்பூர் பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழிசையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக்கி அனுப்பப்பட்டு இருந்த மின்அஞ்சலை காட்டிய போது எடுத்தபடம்.
தமிழிசையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக்கி அனுப்பப்பட்டு இருந்த மின்அஞ்சலை காட்டிய போது எடுத்தபடம்.
Published on

பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

தமிழகத்தில் அமைப்பு ரீதியாக 49 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். இன்றோடு 20 மாவட்டங்கள் நிறைவு பெறுகிறது.

இதுவரை 17மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தின் முடிவு படி அந்தந்த கோரிக்கைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறோம்.

தமிழ்நாட்டில் புதிய புதிய கட்சிகள் தொடங்கி வருகிறார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், தினகரன் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் புதிய மாற்றத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது.

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது உண்மை தான். புதியவர்களால் அந்த வெற்றிடம் நிரம்பாது. பா. ஜனதா 22 மாநிலங்களிலும் , மத்தியிலும் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறது. தமிழகத்திலும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும். மக்கள் பிரச்சனையை நாங்கள் கண்டிப்பாக தீர்த்து வைப்போம்.


குரங்கணி தீ விபத்து மீட்பு பணிக்கு மத்திய அரசு துரிதமாக செயல்பட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ளவர்கள் அதையும் விமர்சனம் செய்கிறார்கள். அது வேதனை அளிக்கிறது. தீ காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது திரை துறையே முடங்கி கிடக்கிறது. அவர்கள் துறையையே அவர்களால் சரிசெய்ய முடியவில்லை. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சனை தீர்ப்பார்கள்? கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். யார், யாருக்கு மின்னஞ்சல் முகவரி இருக்கிறதோ, அவர்களை உறுப்பினர்களாக சேர்த்ததாக மெயில் அனுப்புகிறார்கள்.

கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் (அப்போது தனது டேப்லேட்டில் மின்னஞ்சலுக்கு வந்திருந்த மெயிலை காட்டினார்). அதில் டாக்டர் தமிழிசை வணக்கம் உறுப்பினராக சேர்ந்தமைக்கு உளமாற நன்றி. நீங்களும், நானும் நாமானோம், நாளை நமதே, இது உங்கள் உறுப்பினர் அடையாளமாகும் என்று குறிப்பிட்டு உறுப்பினர் எண்ணாக டி.எண்., டி.ஓ., எப். 92829 என்று குறிப்பிடப்பட்டு என்றும் மாறாத அன்புடன் கமல்ஹாசன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்படித்தான் புதிய உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றும். ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி அரசியல் நாடகம் ஆடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com