

சென்னை:
கொரோனா தொற்றுக்கு முதல்முறையாக யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவ சிகிச்சை மையம் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக யோகா மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கூடுதலாக 800 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் 504 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகும். அவற்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தளர்வில்லா ஊரடங்கு உள்ளிட்ட அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது. விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
உயிரிழப்பு அதிகமாக இருப்பது வேதனையை தருகிறது. இதற்கு முக்கிய காரணம் தொற்று அறிகுறி தெரிந்த உடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
தொற்று முற்றிய பிறகு நுரையீரல் பாதித்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியை அணுகுவதால் காப்பாற்ற முடியாமல் ஆகிவிடுகிறது.
மருத்துவ குழுவினர், உரிய மருத்துவ வசதி, படுக்கை வசதிகள் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உள்ளன. எனவே ஆரம்பத்திலேயே மருத்துவ உதவி பெற்று ஆபத்தை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
முன்னதாக சென்னையில் வாகனங்களில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை பட்டாளத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டனர்.