

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. தற்போது பல நாடுகளில் உள்ளது போலவே, அடுத்த அலைகள் உருவாகும் சூழல் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில், மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சம் பரவாமல் தடுப்பது அரசின் கடமை ஆகும்.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகும் நிலையில், அதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டும். தடுப்பூசி தொடர்பாக மாநிலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.