திருவண்ணாமலை பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது

திருவண்ணாமலை பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37).

இவர் கடந்த 18-ந் தேதி தனது குடும்பத்துடன் ராந்தம் கிராமத்தில் உள்ளது. அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அன்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அரிகிருஷ்ணன், லட்சுமிபதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கொள்ளைச் சம்பவத்தில் நடந்த வீட்டில் கிடைத்த கைரேகையை ஒப்பிட்டு பார்த்ததில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் தனிப்படையினர் திருவண்ணாமலையில் உள்ள எடப்பாளையம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலு (37) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (39) என்பது தெரியவந்தது. அவர்கள் கிருஷ்ணகுமார் வீட்டிலும், மங்களம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தெள்ளாந்தல் கிராமத்திலும் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com