

திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இதில் நடக்கும் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வாணவேடிக்கை உள்ளிட்டவைகளை கண்டு களிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பூரம் திருவிழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டும் இந்த திருவிழா நடத்தப்படமாட்டாது என்று கூறப்பட்டது.
ஆனால் பூரம் விழாவை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அடுத்தமாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி பூரம் திருவிழா நடக்கிறது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்றும், இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.