

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் கடந்த வாரம் 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி, வீட்டில் உள்ள அரிசி, பருப்புகளை தின்று அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து யானைகள் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி தேவாலா பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவாலா பகுதியில் முகாமிட்ட 2 யானைகள், அதன் பின்னர் நாடுகாணியில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்தன. அங்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை இடித்து அட்டகாசம் செய்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அந்ந பகுதிகளில் உள்ள வாழை, தென்னை மரங்களையும் நாசம் செய்தது. இரவு நேரத்தில் வீடு புகுந்து தாக்குவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இதையடுத்து யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு நாடுகாணி பொதுமக்கள், அங்குள்ள தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்காவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து அங்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களிடம் யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்படுகிறது என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.