5 லட்சம் டோஸ் ‘ரெம்டெசிவிர்’- மத்திய அரசு அனுப்பியது

மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்துக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.80 கோடி ஆகும்.
ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து
Published on

சென்னை:

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்தை செலுத்துகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகவே செலுத்தப்படுகிறது.

தனியார் மருத்துவ மனைகளுக்கு சப்ளை இல்லாததால் சென்னையில் அரசு மருந்து விற்பனை கழகம் மூலம் விற்கப்பட்டது. இங்கு கூட்டம் அலைமோதியதால் சென்னை உள்பட 6 நகரங்களில் இந்த மருந்து விற்கப்பட்டது. ரூ.9,400 விலை உள்ள இந்த மருந்து கள்ளச்சந்தையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்பட்டது. இந்த விவகாரத்தில் டாக்டர்கள் உள்பட சிலர் கைதும் செய்யப்பட்டார்கள்.

இதையடுத்து தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைக்கு ஏற்ப ஆன்- லைனில் விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மருந்துக்கான தேடலும், தேவையும் கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. மருந்து கிடைக்காமல் பலர் அலைந்தனர். அதே நேரம் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு எந்த பலனும் தராது என்று ஐ.சி.எம்.ஆர். அறிவித்தது.

இருப்பினும் இந்த மருந்தை மருத்துவர்கள் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்துக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.80 கோடி ஆகும். இப்போது யார் கேட்டாலும் கிடைக்கும் என்ற அளவுக்கு மருந்து கையிருப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com