

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 3,789 பேரும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரியை உள்ளடக்கிய செங்கல்பட்டு மாவட்டத்தில் 906 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மற்ற மாவட்டங்களை காட்டிலும் இந்த 2 மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து ஐ.சி.எம்.ஆர். துணைத்தலைவர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாகி விட்டது. இதே நிலை நீடித்தால் சென்னையில் தினசரி பாதிப்பு அடுத்த மாதம் 19 ஆயிரத்தை தொட்டு விடும்.
பொதுமக்கள் மற்றும் தமிழக சுகாதாரத்துறை விழிப்போடு செயல்படுவது அவசியம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1 வருடத்தில் தமிழகத்தில் 10 லட்சத்து 37,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இப்போது கொரோனா பரவும் வேகத்தை பார்க்கும் போது இன்னும் 2 மாதத்தில் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் உருவாகி விடும் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.