பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டு இருக்கிறார். பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில் உதயநிதி பேச்சு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை, வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com