அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
Published on

சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனாவின் பிடியில் சிக்கி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். தற்போது டாக்டர்கள் அறிவுரையின்படி பெங்களூருவில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் ஒரு வாரம் தனிமை முடிந்து, சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா, தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாகவும் அவர் தங்குவதற்காக அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தியாகராய நகரில் உள்ள வீட்டில், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திப்பதற்காக வீட்டின் முகப்பு வாயிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க சசிகலா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சசிகலா நாளை சென்னை வருகையையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com