கொரோனா தொற்றுக்கு 1200 வங்கி ஊழியர்கள் பலி

கொரோனா பாதிப்பினால் வங்கிகள் 1,200 ஊழியர்களை இழந்துள்ளன. மேலும் எண்ணற்ற ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 2.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,66,200 பேர் பலி ஆகி உள்ளனர். இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலத்தில் வங்கிச் சேவைகள் அத்தியாவசிய வி‌ஷயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு வங்கிகள் செயல்பட கட்டுப்பாடுகளில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக உள்ளனர்.

வங்கி சேவைகளில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் 50 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வங்கி ஊழியர்கள் எண்ணற்றோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1000-க்கும் மேலான வங்கி ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன் கூறியுள்ளார்.

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறுகையில், 1,200 வங்கி ஊழியர்கள் இதுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். ஊழியர்களின் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடுவதிலும், ஊழியர்களுக்கான இழப்பீடு குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் பல வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் மூத்த அதிகாரி தெபாசிஷ் பாண்டே கூறுகையில், வங்கி மற்றும் காப்பீடு துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com