உவரியில் கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியாகி உள்ளார்.
கார்லோஸ்
கார்லோஸ்
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவ ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, கூடுதலாக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியாகி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சித்தவிளையைச் சேர்ந்தவர் கார்லோஸ் (வயது 58). இவர் நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கொரோனா நோய் தொற்று காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இறந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்லோஸ்க்கு, செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு டெரிசா (27), ஜெரிசா (25) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் டெரிசா டாக்டராகவும், ஜெரிசா என்ஜினீயராகவும் உள்ளனர்.

கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியான சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com