

கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் மக்கள் அதிக நெரிசலுடனும், முககவசம் அணியாமலும் செல்வது தொடர்கதையாகி வருகிறது. காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டபோதும் பல இடங்களில் அதைவிட கூடுதலான நேரங்களிலும் கடைகள் இயங்கி வருகிறது.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டனர். நாயுடுபுரம் பகுதியில் கையில் குளுக்கோஸ் பாட்டிலுடன் தப்பி வந்த கொரோனா நோயாளி என்னை காப்பாற்றுங்கள் என பொதுமக்களிடம் உதவி கேட்டார்.
தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அரசு ஆஸ்பத்திரிக்குள் சிகிச்சையில் இருக்க முடியவில்லை எனவும் கதறி அழுதார். அவரை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னர் அங்கு வந்த போலீசார் இது விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று தெரிவித்தனர். நீங்களும் கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதை எடுத்துரைத்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிச்சென்றனர்.