

திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் பழனியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 34) ஓட்டினார். கண்டக்டராக தாராபுரத்தை சேர்ந்த குணசேகரன் (41) இருந்தார். இரவு 11.30 மணி அளவில் அந்த பஸ் புதிய பஸ் நிலையம் நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளது. அப்போது பஸ்சில் ஏறுவதற்காக 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் பஸ்சின் பின்புறம் பலமாக தட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பஸ்சை டிரைவர் ராஜ்குமார் நிறுத்தியுள்ளார். உடனே அவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லால் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினார்கள். இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூத்தம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஜவகர் (25), கோல்டன் நகரை சேர்ந்த நாகராஜ் (27), எம்.எஸ்.நகரை சேர்ந்த கார்த்திக் (30) என்பதும் கூலித்தொழிலாளிகள் என்பதும், பஸ்சை நிறுத்தாத ஆத்திரத்தில் கல்வீசி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜவகர், நாகராஜ், கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.