திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று தனது முந்தைய உத்தரவை திருத்தி தற்போது, கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி:

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்கள் வரையில் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கீதம் தொடர்பான பொதுநல வழக்குடன், மத்திய அரசின் மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தங்களது முந்தைய உத்தரவை மாற்றிக்கொள்வதாகவும் நீதிபதிகள் கூறினர். தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள 12 உறுப்பினர்கள் குழுவினருக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். எனினும், தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பதற்கு மாற்றுத்திறனாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள முந்தைய உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த பொதுநல வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com