

புதுடெல்லி:
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். 2ஜி விவகாரத்தில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து தனது நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் என சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதா வழக்கில் முதலில் விடுதலை செய்து மீண்டும் தண்டனை வழங்கப்பட்டதுபோல் 2ஜி வழக்கிலும் நிலைமை மாறும் என்றும் மற்றொரு டுவிட்டர் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.